Friday, April 29, 2011

சிவனருளால் சிறுநீரகங்களைச் சீராக்கும் சிறுபீளை!


சிவனருளால் சிறுநீரகங்களைச் சீராக்கும் சிறுபீளை!
43
சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா



வாழ்க்கை உணர்வுப்பூர்வமாக வாழப்பட வேண்டும். நுட்பமான உணர்வுகளே நம்மை இறையருளை நாடச்செய்து- இறைவனின் பேரருளைப் பெறச் செய்யும். மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாம் வெறுமையாய் உணர்வோம். இன்ப- துன்பங்களும் மேடு- பள்ளங்களும் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிறவிப் பேறை அடைவதே இந்த பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

உணவு விஷமித்தால் உடலும் விஷமாகும். அத்துடன் மனமும் விஷமித்து நம் சிந்தனையும் விஷமாகும். ஆக, நீலகண்டனாம் சிவபெருமானின் அருள் பெற்ற நடமாடும் சித்தனாம், சிறு பீளையைச் சரணடைந்து நலம் பெற முனைவோம், வாருங்கள்.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாளில் நம் இல்லமெல்லாம் அலங்கரிக்கும் சிறுபீளையைப் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு வெண்ணிறப் பூக்கள் கொண்டு பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும். இதனை சித்தர்கள் "பாஷாணபேதி' என்று சொல்வார்கள். அதாவது சித்தர்கள் தங்களது மருந்து செய்முறையில் 64 வகையான பாஷாணங்களைக் கையாண்டு வந்தார்கள். 64 பாஷாணங்களையும் சுத்தி செய்து அவற்றை மருந்தாக்கி கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளித்து வந்தனர். இப்பொழுதும் 64 பாஷாணங்களைக் கொண்டு சித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பாஷாணங்களைக் கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகளிலும், சில நேரங்களில் பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய பாஷாணங்களினால் ஏற்படும் பக்க விளைவுகளை முழுமையாகக் குணப்படுத்தும் தன்மை சிவன் அருள் பெற்ற சிறுபீளைக்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

நமது உடம்பில் ரத்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது நமது சிறுநீரகங்களாகும். சிறுநீரகங்கள் உணர்வுப் பூர்வமான உறுப்பாகும். சிறுநீரகங்களில் உண்டாகும் சிறுநீரகக் கட்டி, சிறுநீரக வீக்கம், சிறுநீரகங்கள் சுருங்கிப் போதல், சிறுநீரகங்களில் உண்டாகும் சீழ் வியாதிகள், சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று வியாதிகள், சிறுநீர் அதிகமாகப் போதல், நீர் சுருக்கு, நீர் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகளுக்கு மிகச் சிறந்த பலனைத் தரும் மாமருந்து இந்த சிறு பீளையாகும்.

மேலும் உடல் பருமன், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறுகள், ஆண்மைக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

ரத்தத்தில் உப்பு அதிகரிப்பதைக் குறைக்க...

நெருஞ்சில் 50 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம் என சம அளவு எடுத்துக்கொண்டு, அவற்றைக் காய வைத்து தூள் செய்து கொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இரு வேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும். அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வர, ரத்தத்தில் உள்ள உப்பு அதிகரிப்பைக் குறைக்கும்.

சிறுநீரக வியாதிகள் தீர...

நெருஞ்சில் 50 கிராம், சாரணை வேர் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், சோம்பு 50 கிராம், சீரகம் 50 கிராம், சதகுப்பை 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். சோம்பு, சீரகத்தை இளவறுப்பாய் வறுத்துக்கொள்ளவும். பின்னர் அனைத்துச் சரக்குகளையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும், இந்த தூளை தினமும் காலை- இரவு உணவுக்குப் பின் 25 கிராம் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக வியாதிகள் தீரும்.

சிறுநீரகக் கற்கள் கரைய...

மாவிலங்கப்பட்டை 20 கிராம், நெல்லிக்காய் 20 கிராம், கடுக்காய் 20 கிராம், தான்றிக்காய் 20 கிராம், நெருஞ்சில் 20 கிராம், சீரகம் 20 கிராம், சோம்பு 20 கிராம், தனியா விதை 20 கிராம், சதகுப்பை 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம் எடுத்து சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை காலை- மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.

வெள்ளைப்படுதல் நீங்க...

அம்மான் பச்சரிசி 20 கிராம், பாதாம் பிசின் 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம், அதிமதுரம் 20 கிராம், மஞ்சள் 20 கிராம் எடுத்துக் காயவைத்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் நீங்கும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

உடல் பருமன் குறைய...

வாய்விளங்கம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சீரகம் 50 கிராம், சுண்டை வற்றல் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், மாதுளை ஓடு 50 கிராம், சாரணை வேர் 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து தூள் செய்துகொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க...

பூனைக்காலி விதை 50 கிராம், தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம், நிலப் பனங்கிழங்கு 50 கிராம், நத்தை சூரி விதை 50 கிராம், சாலாமிசிரி 50 கிராம், சிறுபீளை 50 கிராம், அமுக்கரா 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு, கை- கால் நடுக்கம் போன்றவை முற்றிலும் குணமாகும்.

நமது உடம்பு விஷமித்தால் நமது சிந்தனை விஷமிக்கும்; செயல்பாடு குறையும். பிறவிப் பயன் பெறுவது பெரும் சிக்கலாகும். எனவே சிறுபீளையைச் சரணடைந்து சிறப்பான பலன் அடைந்து ஈசன் அருளால் நல்வாழ்வு வாழ்வோம்!